உக்கடம் பஸ் நிலையத்தில் கேரளா பஸ் டிரைவர் மீது தாக்குதல்.

கேரளாவை சேர்ந்தவர் உமர்(வயது49). இவர் கேரள அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது இவரது பஸ்சுக்கு முன்பு மற்றொரு கேரள அரசு பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை கேரளாவை சேர்ந்த முஜீபுர் ரகுமான்(48) என்பவர் ஓட்டினார். அவர், பின்னால் வந்த பஸ்சுக்கு வழிவிடவில்லை என தெரிகிறது.

இதையடுத்து உமர், முஜீபுர் ரகுமானிடம் சென்று பஸ்சை நகர்த்து மாறு கூறினார். இதயைடுத்து அவர் பஸ்சை நகர்த்தினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முஜீபுர் ரகுமான், தகாத வார்தைகளால் திட்டி டிரைவர் உமரை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் உமர் படுகாயம் அடைந்தார். இதனால் சிறிது நேரம் உக்கடம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பானது. பின்னர் காயம் அடைந்த உமரை அருகில் இருந்த வர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கேரள அரசு பஸ் டிரைவர் உமர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார், முஜீபுர் ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.