ஊட்டியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 150 மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி.

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பை, உதகை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.

இதில், அவர் பேசியதாவது:- பள்ளி கல்வித் துறை சார்பில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு இளைஞர்கள் மத்திய அரசு போட்டி தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு, சிறந்த திறன் பயிற்சியை வழங்குவதை குறிக்கோளாக கொண்டு போட்டித் தேர்வு பிரிவு தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த பயிற்சியை மாவட்டந்தோறும் அளிக்க இருக்கிறது. அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் இப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக 150 மாணவ, மாணவிகளுக்கு 300 மணி நேரம் தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் என 100 நாட்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு, திங்கள் முதல் வெள்ளிக்கி ழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். சனிக்கிழமை அன்று மாதிரி தேர்வு நடத்தப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், ஊட்டி கோட்டாட்சியர் துரைசாமி, தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் கஸ்தூரி, அரசுக்கலைக் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி பணியமர்த்தும் அலுவலர் பாலசுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.