சிங்கப்பூர் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு 31ஆம் தேதி சென்னை திரும்புகிறார் மு க ஸ்டாலின்.

கோவை மே 29-

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு (31-ந்தேதி) சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். தமிழகத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அரசு சார்பில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டார். சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 25-ந்தேதி ஜப்பான் சென்றார்.

அங்கு ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஜப்பான் நாட்டு தொழில் நிறுவனங்களுடனும் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண் டார். அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் சென்று பார்வையிட்டார். ஜப்பான் வாழ் தமிழர்களையும் சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருமாறு அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து ஜப்பானில் இன்றும் நாளையும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு வருகிற 31-ந்தேதி இரவு 10 மணிக்கு (புதன்கிழமை) வந்தடைகிறார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க உள்ளனர்.