
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மஞ்சப் பை என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாவட்டந்தோறும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு அதனை உபயோகிப்பதற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். இது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கோவையில் வைக்கப்பட்டுள்ள முதல் தானியங்கி இயந்திரமாகும். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் உட்பட 5 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்த தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.
இந்த இயந்திரத்திற்குள் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் இயந்திரத்திம் ஒரு மஞ்சப்பை-யை வழங்குகிறது. இது தவிர 10 ரூபாய் நோட்டுக்களையும் செலுத்தி பைகளை பெற முடியும். மேலும் 20 ரூபாய், 50 ரூபாய் மாற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி தேவைக்கு ஏற்ப பைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5 இயந்திரங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.