கோவையில் தொடர் மயில்கள் உயிரிழப்பு: வன ஆர்வலர்கள் அதிர்ச்சி !!!

கோவை ,மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.

சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். மேலும் சில விவசாயிகள் சட்ட விரோதமாக பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளுக்கு நாட்டு வெடி, விஷம் வைத்து கொன்று வந்தனர். அவர்கள் மீது வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தற்பொழுது விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் உணவுக்காக வேட்டையாடிய சம்பவமும் அரங்கேறியது, மேலும் மருத்துவ குணம் கொண்ட எண்ணெய் தயாரிக்க மயில்கள் வேட்டையாடி அழிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது வனத் துறையினரின் தீவிர நடவடிக்கையால் அது போன்ற குற்றங்கள் குறைந்து வருகின்றது. என்றாலும் வனவிலங்குகள் அவ்வப் போது உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகர் பகுதியில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் இதுகுறித்து புகைப்படத்துடன் தகவல் கொடுத்தார். தகவல் பேரில் அங்கு சென்ற வனத் துறையினர் அந்த மயிலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலின் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்துள்ளது.