கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-ம் நாள் தேரோட்டம்.

கோவை மே 27-

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் முதல் நாள் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 2-ம்  தேரோட்டத்தை சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் முன்னிலையில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோ தரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். வாண வேடிக்கைகள் முழங்க விநாயகர் சப்பரம் முன்னால் செல்ல பின்னால் சூலக்கல் மாரியம்மன் தேர் பக்தர் வெள்ளத்தில் தவழ்ந்து வந்தது. 3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.