மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கோடிக்கணக்கில் முறைகேடு !

கோவை, மதுக்கரை மார்க்கெட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூற்றாண்டு பாரம்பரியமிக்க இந்த கோவில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தன. இது தொடர்பான புகார்கள் தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் பக்தர்கள் தரப்பில் இருந்து ஏராளமான  புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகி சி.கே.கண்ணன் கூறுகையில், நான் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகியாக உள்ளேன். எனது பணிக்காலத்தில் என் சொந்த பணத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தண்ணீர் தொட்டி, பக்தர்கள் ஓய்வு எடுக்க இரண்டு இளைப்பாரும் மண்டபங்கள் கட்டிக் கொடுத்து உள்ளேன். மேலும் அன்னதானம் போன்ற பணிகளையும் செய்து வருகிறேன்.

தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் வருமானம் முழுவதையும் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஒருவரை கொண்டு கணக்கிட்டு முறைப்படி தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று  கூறினேன். ஆனால், இதை தற்போது கோவில் நிர்வாகிகளாக இருக்கும் கிருஷ்ணசாமி, அரசு பஸ் ஓட்டுனர் திருமூர்த்தி, கோவில் பூசாரி பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஆடிட்டரும் தேவையில்லை, அரசுக்கும் கணக்கு கொடுக்கவும் தேவையில்லை என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள் தமிழக அரசு கோவில்களுக்காக வகுத்து வைத்துள்ள சட்ட திட்டங்களையும் கடைபிடிப்பது இல்லை. இதை தவறு என்று சுட்டிக்காட்டிய என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஆட்களை வைத்து மிரட்டலும் விடுத்தனர். அரசு பஸ் ஓட்டுனராக இருக்கும் கோவில் நிர்வாகி திருமூர்த்தி பக்தர்களிடம் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.

இவர்கள் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கைகளை அண்டாவில் அள்ளிச் செல்வதோடு அன்னதானத்திற்கு பக்தர்கள் தரும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றையும் தங்கள் சொந்த உபயோகத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் பக்தர்களிடம் வசூல் செய்யும் நன்கொடை தொகைகளுக்கு எந்த வித ரசீதும் தருவது இல்லை. கோவில் கட்டுமான பணிகளுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் சிமெண்ட் மூட்டைகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள் . கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கில் நடந்து வரும் இந்த முறைகேடுகளை தமிழக அரசு கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி கோவில் பணத்தில் முறை கேடாக சேர்த்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறினார். பேட்டியின்போது தர்மலிங்கேஸ்வரர் திருக்கோவில் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான சிவராஜ் உடன் இருந்தார்.