தமிழகத்திலேயே முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் இரண்டு பெண் போலீசார்.

கோவை மே 23-

கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன. இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:- நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார். இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.