மூளைச்சாவடைந்த 25 வயது நபர் 7 பேருக்கு  மறுவாழ்வு அளித்தார்!

சீனிவாசன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம் பண்ணை, தெற்கு வீதியில் அவரது பெற்றோர்கள் இளமுருகன், கனகவல்லி மற்றும் மூத்த அண்ணன் விஜயகுமார் ஆகியோருடன் வசித்துவந்தார்.

இவர் கடந்த 29.4.2023ஆம் தேதி இரவு 10.25 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 9.5.2023ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் இளமுருகன், கனகவல்லி மற்றும் மூத்த அண்ணன் விஜயகுமார் ஆகியோர் சீனிவாசன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல் தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது.

கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், இருதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர். இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய சீனிவாசன் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறினார்.