15 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து பி.எஸ்.ஜி. மருத்துவமனை சாதனை

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் முதல் முறையாக 15 வயது சிறுவனுக்கு இருதயத்தை மாற்றிப் பொருத்தி மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் தாராபுரம் பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுவன் சிகிசைக்காக அழைத்து வரப்பட்டான். அதற்கு முன்னர் பல நாட்களாக வேறு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பல்வேறு மருந்து மாத்திரைகளை உட்கொண்டும் ஏதும் பலனளிக்கவில்லை.

பி.எஸ்.ஜி. மருத்துவமணையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனது இதயத்தைச் சுற்றி கொழுப்புகள் சூழ்ந்துள்ளதால் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பெரிய அளவில் பயன் தராது எனவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில் சிறுவனுக்கு இருதயத்தை மாற்றி அமைப்பதே, அதாவது இருதய மாற்று அறுவைசிகிச்சை செய்வதே சிறந்தது என்று சிறுவனின் பெற்றோரிடம் விளக்கினர். அவர்களும் சிறுவனின் நிலைமையை கருத்தில்கொண்டு தங்களது மகனுக்கு இருதய மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். அதற்காக அரசு இணையதளத்தில் பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மதுரையில் விபத்தில்  மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளியின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

அதன் ஒருபகுதியாக அந்த நோயாளியின் இதயத்தை இந்த 15 வயது சிறுவனுக்குப் பொருத்தத் தீர்மானிக்கப்பட்டு, பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் இருதய மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரதீப் தலைமையில் மருத்துவக்குழுவினர் மதுரைக்கு விரைந்தனர். மூளைச்சாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் அகற்றப்பட்டு, அங்கிருந்து  இருதயத்தை ஆம்புலன்ஸ் மூலமாக சுமார் 2 மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் மதுரை, திருப்பூர், கோவை மாவட்டப் போக்குவரத்து காவல்துறையினர் உதவி மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் கோவைக்கு கொண்டுவரப்பட்டது. பிறகு அந்த இருதயம், 12.04.2023 அன்று பி எஸ் ஜி மருத்துவமனையில் இருந்த சிறுவனுக்கு,  வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இது குறித்து மருத்துவர் பிரதீப் அவர்கள் கூறியதாவது: கோவை மாநகரில் 15 வயது சிறுவனுக்கு இருதயமாற்று அறுவைசிகிச்சை செய்வது இதுவே முதன்முறை ஆகும். தற்போது சிறுவன் நலமுடன் மருத்துவர் குழுவினர் கண்காணிப்பில் உள்ளான். சாதாரணமாக நோயாளிகள் குணமடைய ஆகும் நாட்களைவிட விரைவாக இந்த சிறுவன் உடல்நலம் தேறிவருகிறார் என்றார். மேலும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சமீபத்தில் இருதயமாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் அனைவரும் பூரண நலத்துடன் விரைவாக வீடு திரும்பி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மிகச்சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் அதி நவீன மருத்துவ வசதிகளுடன் பிரத்யேகமான இருதயமாற்று அறுவைசிகிச்சைத் துறை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் செயல்படுவதாகவும் தெரிவித்தார். ஒன்றரை வயது குழந்தைகள் முதல் 55 வயது வரை உள்ளவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள் பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு வருகைபுரிந்து தங்களது பெயர் மற்றும் விபரங்களை இங்கேயே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.