திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக கோவைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வாதாக கூறிய அவர், புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி இரு பெரும் தலைவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த நிலையில் எளிய தொண்டனாக இருந்த நான் பதவி ஏற்றுள்ளேன் என்றார். ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது, இதுவரை வாரிசு மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும் ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே, வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது என கூறிய அவர் திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருவதாகவும், திமுக ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொற்கால ஆட்சியை கொடுத்ததாகவும் இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக மாறியுள்ளதாகவும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் எனவும் கூறினார்.

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது அதிமுக என கூறிய அவர் அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை – பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான், திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இறுதியில் தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை என்ற அவர்  வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறினார்.