ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் பழங்குடி மாணவர்களுக்கு கொண்டனூரில் சிறப்பு முகாம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கோவை ஆனைக்கட்டி அருகேயுள்ள கொண்டனூரில் 4 மாநில மாணவர்களுக்கு ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுஅமைச்சகம், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு நேருயுவகேந்திரா சங்கதன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ‘பழங்குடியின இளைஞர் பரிமாற்ற சிறப்பு முகாம்’, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மார்ச் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் பீஹார், சத்திஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 220 பங்கேற்றுள்ளனர்.

இம்முகாமின் ஒரு பகுதியாக, பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆலோசனையின் பேரில், 4 மாநில பழங்குடியின மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தத்தெடுத்து பல்வேறு சேவைகளை செய்து வரும், கொண்டனூர் பழங்குடியின கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், பழங்குடியின மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தார். அங்கு வாழும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்வியல் சூழலை கொண்டனூர் பழங்குடியின மக்களும், பிற மாநில மாணவர்களும் அறிந்துக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பழங்குடியின மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடனமாடி அசத்தினர். பின்னர் நாட்டின் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து, அனைவரிடமும் ஒற்றுமையை வலியுறுத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.