அடிக்கடி போதிய அளவு நீர் குடியுங்கள்! – வெயிலை சமாளிக்க தமிழக அரசு டிப்ஸ்

இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அடிக்கடி போதிய அளவு குடிநீர் பருக வேண்டும் எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், அனைத்து மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக்ஸ், குளிரூட்டும் கருவிகள், போதிய குடிநீர் இருப்பு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் அடிக்கடி போதிய அளவு குடிநீர் பருக வேண்டும், தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழங்களை சாப்பிட வேண்டும்.

மெல்லிய தளர்வான உடை மற்றும் பருத்தி ஆடைகளை மட்டும் அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, துண்டு போன்றவற்றால் தலையை மூடியபடி செல்ல வேண்டும், குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக வெப்ப நிலை இருக்கும் நேரத்தில் சமைக்கக் கூடாது. மதுபானம், தேநீர், காபி, சர்க்கரை அதிகமாக இருக்கும் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது, அதிக புரதசத்து உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.