கோவையில் முதல்முறையாக 1300 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்கம்

உடற்பருமன், சர்க்கரை நோய் இருதய நோய்களை அதிகரிக்கும்!

– ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பின் படி, உலக மக்கள் தொகை எட்டு பில்லியனை (800 கோடி) எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உலகம் முழுவதிலுமே 12,500 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தான் உள்ளனர் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?

அதில் 1300 நிபுணர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சை கருத்தரங்கில் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் கலந்துகொண்டனர். எதற்காக இந்த கருத்தரங்கம்? அதில் பேசப்பட்ட தகவல்கள் குறித்து காண்போம்.

இந்தியாவில் உள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காக இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பாக வருடத்திற்கு ஒருமுறை கருத்தரங்கம் நடத்தப்படும். இது ஒவ்வொரு நகரத்தில் நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் முறையாக இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69 வது கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர். மேலும் உலகம் முழுவதும் இருந்து 1,200 க்கும் அதிகமான இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் 40 நிபுணர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பியா, அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.

இந்த கருத்தரங்கம் மூன்றரை நாட்கள் நடந்தது. முதல் நாள் இருதய அறுவை சிகிச்சையில் முதுநிலை மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல விரிவுரைகள் வெளிநாட்டில் இருந்து வந்த மற்றும் நம் நாட்டை சேர்ந்த மூத்த நிபுணர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அடுத்து வந்த நாட்களில், குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை, நுரையீரல் அறுவை சிகிச்சை, இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை உள்ளடக்கிய தலைப்புகளில் பேசப்பட்டது. மேலும் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணி உதவியாளர்களுக்கான கருதரங்கமும் இதில் இடம்பெற்றது. இருதய அறுவை சிகிச்சையில் அடிப்படையில் இருந்து தற்போது உள்ள முன்னேற்றங்கள் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தியாகராஜமூர்த்தி இந்த கருத்தரங்கின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகவும், குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் சதாசிவம் பொருளாளராகவும் செயல்பட்டனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதில் கலந்துகொண்டு, சுகாதார முன்னேற்றம், மாரடைப்பு வருவதை தடுப்பதைப் பற்றியும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் இருதய அறுவை சிகிச்சை அதிகம் செய்யப்படுவது, ட்ரான்ஸ்டான் (TRANSTAN) என்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தளத்தை தமிழகம் தான் முதன் முதலில் துவங்கியது உள்ளிட்ட தகவல்களை அவர் எடுத்துக் கூறினார்.

தற்போது இருதய அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், ரோபோடிக் அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை, நுண்துவார அறுவை சிகிச்சை குறித்தும், தொழில் நுட்ப ரீதியிலான அணுகுமுறை பற்றியும் பேசப்பட்டது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கருத்தரங்கில் தலைமை உரை வழங்கினார். இந்த மருத்துவக் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றதால் பல பலன்கள் கிடைத்துள்ளதாகவும், மருத்துவத் துறையில் அறிவுசார் பகிரலுக்கு இது ஒரு சிறந்த தளம் என்றும் கூறினார். மேலும், இந்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றதால் இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி, வருவாய் வளர்ச்சி ஆகியவை பெருகும் என தெரிவித்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்கி வருகிறது. சுமார் 27 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது எனக் கூறினார்.

சிறந்த பலனை தரும் சிறுதுவார அறுவை சிகிச்சை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தியாகராஜமூர்த்தி, தமிழகத்திலேயே அதிகமான சிறுதுவார இருதய அறுவை சிகிச்சையை செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 8 வருடமாக இந்த அறுவை சிகிச்சைகளை இவர் மேற்கொண்டு, நோயாளிகளை காப்பாற்றி வருகிறார். மேலும் இக்குறிப்பிட்ட அறுவை சிகிச்சையில் இவர் அதிக அனுபவம் பெற்றுள்ளதும் கவனித்தக்கது.

சிறுதுவார இருதய அறுவை சிகிச்சை பற்றி அவர் கூறுகையில்: இருதய அறுவை சிகிச்சை என்றாலே நோயாளிகளுக்கு பொதுவாக ஒருவித பயம் ஏற்படும். அதுவும் திறந்த நிலை அறுவை சிகிச்சை எனும் போது, இன்னும் பயம் உண்டாகும்.  ஆனால் சிறுதுவார இருதய அறுவை சிகிச்சையில் இதுபோன்று பயம் கொள்ள தேவையில்லை. இதன் மூலமாக இருதய வால்வு மாற்று சிகிச்சையும், பைபாஸ் சிகிச்சையும் செய்துக் கொள்ள முடியும். இந்த சிறுதுவார இருதய அறுவை சிகிச்சையில் நோயாளி விரைவிலேயே வீடு திரும்பி விடலாம்.

வலி மிக குறைவாக இருப்பதோடு, பெரிய அளவிலான தழும்புகள் இதில் இருக்காது. பொதுவாக இருதய வால்வு மாற்று சிகிச்சை இளம் பெண்களுக்கும் செய்யப்படுகிறது. அந்த சமயத்தில் பெரிய அளவிலான தழும்புகள் இருந்தால் அது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் இதுபோன்ற எந்த பாதிப்பும் சிறுதுவார இருதய அறுவை சிகிச்சையில் ஏற்படாது. தழும்பு மிக சிறிய அளவிலேயே ஏற்படும்.

சில நேரங்களில் குழந்தை பிறக்கும் போதே, இருதயத்தில் குறைபாடுடன் பிறக்கும். இதுபோன்ற நேரத்தில் திறந்த நிலை அறுவை சிகிச்சையைக் காட்டிலும், சிறுதுவார அறுவை சிகிச்சையில் சிறந்த பலன் கிடைக்கும். சமூக காரணிகளால் ஏற்படும் தாக்கமும் குழந்தையை பாதிக்காது.

இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் ஒருவர், விரைவிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி தங்களது வழக்கமான பணிகளை செய்யலாம். வாகனம் இயக்குதல் அல்லது பிற நடவடிக்கைகளை விரைவாகத் தொடங்கலாம்.

இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, பைபாஸ் சிகிச்சை செய்யப்படுகிறது. இது இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் சிகிச்சையாகும். மேலும், இதனை சிறுதுவார இருதய அறுவை சிகிச்சையாக செய்யும் போது, வலி இல்லாமல் இருப்பதோடு, விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இதுபோன்ற அடைப்பு, கொழுப்பு, ரத்த அழுத்தம், கால்சியம் படிதல், புகைப் பிடித்தல், உடற்பருமன் ஆகிய காரணங்களினால் வருகிறது.

இதய நிறுத்தம், மாரடைப்பு இரண்டும் ஒன்றா?

கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்), ஹார்ட் அட்டாக் (மாரடைப்பு) இரண்டும் வெவ்வாறானது. ஹார்ட் அட்டாக் என்பது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்தம் செல்வது தடைபடும். இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படும்போது இருதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில் சரியான சிகிச்சை ஒருவருக்கு கிடைக்கவில்லையென்றால் இருதய நிறுத்தம் உண்டாக வாய்ப்புண்டு.

நெஞ்சுவலி, உடம்பு வேர்த்துப் போகுதல், கை மற்றும் தாடை வலி ஏற்படும். இதற்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனையில் எத்தனை அடைப்புகள் உள்ளது எனக் கண்டறிப்படும். ஒன்று அல்லது இரண்டு அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு இந்த சிகிச்சை செய்ய முடியாத நிலையில், பைபாஸ் சிகிச்சை வழங்கப்படும்.

ஆனால், கார்டியாக் அரெஸ்ட் என்ற இதய நிறுத்தம் ஏற்படும்போது, இதயம் துடிப்பதையே நிறுத்திவிடும். கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள். இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இருந்த போதிலும், கார்டியாக் அரெஸ்ட் பல காரணங்களினால் வரலாம். சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், கார்டியாக் அரெஸ்ட் சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் மரணத்தை கொண்டு வரும்.

இளம் வயதினரை தாக்கும் ருமாட்டிக் இருதய நோய்

இருதய வால்வு பொறுத்தவரையில் ருமாட்டிக் இருதய நோய், பெருந்தமனி தடிப்பு (Atherosclerosis) என்ற இரண்டு விதமான பிரச்சனைகள் வரலாம். ‘ருமாட்டிக்’ காய்ச்சல் என்பது, பொதுவாக சிறுவயதில் ஏற்படும் நோய். இந்த நோயின் தன்மை, மூட்டுவலியாக வெளிப்பட்டாலும், பாதிப்பு இதயத்திற்குத் தான். இதய வால்வுகளில் ரத்தக்கசிவும், சுருக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறுவயதில் மூட்டு வீங்கி, காய்ச்சல் உண்டாகி தொண்டை வலி ஏற்படும். இது நாளடைவில் ருமாட்டிக் இருதய நோயாக மாறுகிறது.

ஸ்ட்ரெப்டோகாக்கல் எனும் தொண்டையைத் தாக்கும் பாக்டீரியாவும், இதயத்தில் உள்ள வால்வும், மூட்டில் உள்ள ஜவ்வும் ஒரே மாதிரியான புரதத்தைக் கொண்டுள்ளது.  ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா உடலுக்கு சென்ற உடன், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாவுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இந்த ஆன்டிபாடிகள் பாக்டீரியாவின் புரதத்தை தாக்கும் போது, அதேபோன்ற புரத தன்மை இருக்கும் பிற இடத்தையும் தாக்குவதால் அவை வீக்கமடைகின்றன.

சில காலம் கழித்து இதயத்தில் உள்ள வால்வு சுருக்கம் அடைவதால், இருதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது. இதனால் வால்வை மாற்ற வேண்டிய நிலை உருவாகிறது. இது இளம் வயதில் ஏற்படுகிறது. இதனை ருமாட்டிக் இருதய நோய் என்கிறோம்.

60 அல்லது 70 வயதுக்கு மேல், இதயத்தில் வால்வின் மீது கால்சியம் படிந்துவிடுவதால் அது தடித்து விடுகிறது.  இது பெருந்தமனி தடிப்பு எனப்படுகிறது.

அடுத்ததாக பீட்டிங் ஹார்ட் சர்ஜரி முறை என்பது இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் போதே, அடைப்பு ஏற்பட்டுள்ள ரத்தக் குழாயில் பைபாஸ் சிகிச்சை வழங்குவது. இதில் நோயாளி விரைவிலேயே குணம் அடைந்து விடுவார்.

சாலை விபத்தில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு

கடந்த 40 ஆண்டு காலமாகவே இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உலக அளவில் இந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை குறைந்த அளவிலேயே செய்யப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான். மேலும், இருதய தகுந்த நேரத்திற்கும் கிடைப்பதில்லை.

இந்தியா முழுவதும் சாலை விபத்தில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பெரும்பாலானவர்கள் தலையில் அடிபட்டு மூளைச்சாவினால் இறக்கின்றனர். இவர்களில் முக்கால் வாசி பேருக்கு இருதயம் நல்ல முறையிலேயே உள்ளது.

ஆனால் மூளை சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து, இருதயம் செயல் இழந்த ஒருவருக்கு பொருத்தும் முன்பு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்யப்படும். அதில், மிக முக்கியமானது ஒரே ரத்த வகையை கொண்டிருப்பது.

ஹார்ட் அட்டாக், வால்வு பிரச்சினை, வைரஸ் தொற்று காரணமாக இருதயம் ஒருவருக்கு செயலிழந்து போகலாம். இதயம் பலவீனமாக இருப்பதோடு, மாற்று இருதயத்தை பொறுத்த வேண்டும் என்ற நிலையில், இருதயம் தேவைப்படும் நோயாளிகள் TRANSTAN என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதிகரிக்கும் இருதய நோய்கள்

இருதய நோயாளிகள் அதிகம் இருக்கும் நிலையில் அதற்கு சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். உடற்பருமன், சர்க்கரை நோய் இவை இரண்டும் அதிகமாகும் போது, இருதய நோய்கள் அதிகரிக்கும். உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளாக இருதய நோய்கள் அதிகரித்துள்ளது.

வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவை மத்திய வயதிலேயே கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணமாக உள்ளது. இதைக் தவிர்க்க வாழ்க்கை மற்றும் உணவு பழக்க மாற்றம் அவசியம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதால் தான் இவை மாறும்.

1000 குழந்தைகளில் 10 பேருக்கு இருதய நோய்!

இந்தக் கருத்தரங்கின் பொருளாளர் மற்றும் குழந்தைகளுக்கு வரக்கூடிய இருதய நோய் தொடர்பான தலைப்புகளில் பேசப்பட்ட விரிவுரையை ஒருங்கிணைத்த குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் சதாசிவம் பேசியதாவது:

குழந்தைகளுக்கு வரக்கூடிய இருதய நோய் தொடர்பாக பேசுவதற்கு மட்டும் ஹார்வேர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மருத்துவப் பேராசிரியர்கள் பங்கேற்று விரிவுரை வழங்கினர்.

பல நாடுகளில் இருந்து வந்திருந்த முன்னணி குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிபுணர்கள் இதில் கலந்துகொண்டனர். புதிய ஆலோசனைகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசப்பட்டது. குழந்தைகளுக்கான இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஆயிரம் உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 10 பேருக்கு இருதய நோய் உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய நோயும் அதிகமாகவே உள்ளது. இதில் பல விதமான நோய்களும், பாதிப்புகளும் உள்ளன.

இதில் தற்போது அட்வான்ஸ்டாக உள்ள நோய் பற்றி பேசப்பட்டதுடன், ஒவ்வொரு நோய்க்கான சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கான இருதய வால்வு பிரச்சினைகள், அதை சரி செய்ய சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் பேசப்பட்டது. இந்தியாவில் இருதயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், வெளிநாட்டில் அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு இருதய திசுக்கள் மிகவும் மெலிதனதாக இருக்கும். ஹைப்போபிளாஸ்டிக் லெஃப்ட் ஹார்ட் சிண்ட்ரோமுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, அதாவது பிறந்த குழந்தையின் இருதயத்தின் இடது பக்கம் வளர்ச்சி அடையாமல் இருக்கும். இவர்களுக்கு நோர்வுட் அறுவை சிகிச்சை செயல்முறை தேவைப்படுகிறது. அந்த சிகிச்சையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பரவலாக இருக்கக் கூடிய, குழந்தைகளுக்கு ஏறபடும் பிறவி இருதய கோளாறுகளுக்கு நவீன சிகிச்சை முறைகள் பற்றி கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. இந்திய நாடு பின்பற்றும் நவீன சிகிச்சை முறைகளை வெளிநாட்டவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

தாயின் கருவறையில் குழந்தையின் இருதயம் உண்டாகும் போதே ஒரு குறைபாடுடன் உருவாகும். மேலும் இருதயத்தில் துவாரம் மற்றும் அடைப்பு ஏற்படும் பிரச்சினை பொதுவாகவே காணப்படும்.

அதுமட்டுமல்லாமல் ரத்தக் குழாய்கள் மாறி இருப்பதும் உண்டு. நுரையீரலில் இருந்து இருதயத்துக்கு வரும் ரத்தம் இடதுபுறம் செல்லவேண்டும். ஆனால் அப்படி செல்லாமல் வலது பக்கம் சென்றால், Total anomalous pulmonary venous connection எனப்படும். இவை அனைத்தும் குழந்தைகளின் இருதயத்தில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள்.

வளர்ந்த நாடுகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறையும், இந்தியாவில் வழங்கப்படும் சிகிச்சையும் ஒரே அளவிலேயே உள்ளன. சில இருதய குறைபாடுகளை பிறந்த உடனேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சைகளை வழங்கவேண்டும். அப்படி கண்டறியாமல் விட்டுவிட்டால், வயதாகும் போது, நோய் முற்றிய நிலை ஏற்பட்டு தீவிர நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

குழந்தை பிறந்த உடனேயே அதற்கு தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்யவேண்டும். அதற்காகவே பிரத்தியேக நிபுணர்கள் உள்ளனர். தாய் கருவுற்று இருக்கும் சமயத்தில் ஐந்து மாதத்திலேயே கருவின் இருதயம் எப்படி உள்ளது என அனாமலி ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து விடலாம். இந்த ஸ்கேனை கருவுற்ற தாய்மார்கள் அனைவரும் கட்டாயம் எடுக்கவேண்டும். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதற்கு உண்டான ஆலோசனைகளும், தீர்வுகளும் வழங்கப்படும். அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில் சில இருதய கோளாறுகளை முற்றிலும் குணப்படித்திட முடியும்.

எதனால் குழந்தைக்கு இருதய பிரச்சினை ஏற்படுகிறது என சில நேரங்களில் தெரியாது. தாய்மார்களுக்கு கருவுற்ற சமயத்தில், முதல் மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால் கூட குழந்தைக்கு இருதய பாதிப்பு வரலாம்.

குழந்தைகளுக்கு இருதய நோய் முற்றிய நிலை ஏற்பட்டு, நுரையீரல் அழுத்தம் அதிகம் உண்டான பின் சிகிச்சை அளிப்பது ஒரு சிக்கலான விஷயம். இதுபோன்ற நிலையில் நுரையீரல் மற்றும் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 25 முதல் 30 சதவீதம் வரை மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் தற்போது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் விகிதம் சற்று அதிகரித்து வருகிறது. முக்கியமாக குழந்தை வயிற்றில் இருக்கும் போது, தாய்க்கு எந்த வித தொற்றும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.