சின்னத்திரை நடிகர்களின் புதிய இணையத் தொடர் ‘மாய தோட்டா’ அறிமுகம்

ஹங்காமா, அதன் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான ‘மாயத் தோட்டா’வை வெளியிடுகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைத் துறையின் பிரபல நட்சத்திரங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ் மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் மர்மமான சூழ்நிலையில் அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்படுவதுடன் இந்த இணையத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கொடூரமான கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணரும் போலீஸ் விசாரணை, நேரத்துடன் போட்டி போடும் ஒன்றாக மாறுகிறது.

நந்தகுமார் ராஜூ இயக்கியுள்ள இந்த இணையத் தொடரை, ஹங்காமாவுடன் இணைந்து மது அலெக்சாண்டர் மற்றும் பிரபு ஆண்டனி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

நிகழ்ச்சியைப் பற்றி ஹங்காமா டிஜிட்டல் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த்த ராய் கூறுகையில், எங்களுடைய முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான மாயத் தோட்டாவின் மூலம், தென்னிந்தியாவில் எங்களின் தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு படி முன்னேறியுள்ளோம். பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு மற்றும் அழுத்தமான கதைக்களம் ஆகியவற்றுடன் கூடிய இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.

இயக்குநர் நந்தகுமார் ராஜூ கூறுகையில், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடியை உள்ளடக்கிய கதைகளை தெற்கில் உள்ள குடும்பப் பார்வையாளர்கள் அதிகம் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றை அவர்களுக்கு வழங்குவதே எனது நோக்கமாக இருந்தது. பார்வையாளர்களை வியக்க வைக்கும், சிந்தனையில் ஆழ்ந்துபோக வைக்கும் கதையைக் கொண்டது மாயத் தோட்டா. தனித்துவமான, வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான கதைக்களத்தின் காரணமாக பார்வையாளர்களிடம் இது கூடுதல் ஆர்வத்தையும் பாராட்டுகளையும் பெறும் என்று நான் நம்புகிறேன் என்றார்.