ஆர்.வி கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா

டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார்.

காரமடை, சவிதா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சசித்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்களுக்கு கல்வியறிவு அவசியம். அதுவே மிகப்பெரிய ஆயுதம். கல்வி கற்றால் சிறந்த எதிர்காலம் அமையும். கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள். எந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட முறையில் பெண்கள் செயல்பட வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில் வேறுபாடு இருந்தாலும் ஆண்களுக்குப் பெண்கள் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல.

கல்வி, அரசியல், நிர்வாகம், மருத்துவம் என ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் இன்றைய பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, நல்ல தூக்கம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி பாராட்டினார்.