தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வெற்றி பெற்றுள்ளது – எடப்பாடி பழனிச்சாமி

சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை விமான நிலையத்திற்கு சென்னை செல்ல வியாழக்கிழமை வந்தார்.

தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது. 22 மாதமாக சம்பாதித்த பணத்தை வைத்து தண்ணீர் போல் பணத்தை வாரி இறைத்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 120 இடங்களில் வாக்காளர்களை டெண்ட் அமைத்து பட்டியில் அடைத்து பணத்தை கொடுத்து, பல்வேறு பரிசு பொருள் கொடுத்து, வெள்ளி கொலுசு வாட்ச் குக்கர் வழங்கி, வாக்காளர் வீடுகளுக்கு கோழிக்கறி கொடுத்து, மளிகை ஜாமான் கொடுப்பதாக டோக்கன் வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடமும் புகார் செய்தோம். ஆனால் தேர்தல் அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்ட திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 22 மாத காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு முதலீடு செய்து வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜனநாயகபடி நின்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும். அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வெற்றி பெற்றுள்ளார்கள்.

2021 ல் 96 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலை வைத்து திமுக வெற்றி பெற்றதாக கொண்டாடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெறும். இந்த வெற்றி தேர்தல் ஆணையத்தின் தோல்வி. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.

இந்த தேர்தல் முழுக்க முழுக்க ஆட்சி அதிகாரம், பணபலம், பரிசு பொருட்கள் மூலம் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக பரிசு பொருள் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையம் இருக்கா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. கொரோனா தொற்று உள்ளிட்ட காலங்களில் ஏழை எளிய மக்கள் வருமானம் இல்லாத சூழலில் இருந்தனர். இதை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பரிசு பொருள் கொடுக்கிறோம் என வாக்கு பெற்றுள்ளனர். மக்கள் சுயமாக வாக்களிக்கவில்லை. தற்போது நடந்தது ஜனநாயக படுகொலை. இது பேராபத்து என்று இவ்வாறு தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.