கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு

கோவை கோனியம்மன் கோயிலில் திருத்தேரோட்டம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. வெகு விமர்சையாக நடைபெறும் இந்த தேரோட்டத்தினை காண கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதன்படி இன்று காலை முதலே அதிகளவிலான பக்தர்கள் தேர்நிலை திடலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நான்கு காவல் துணை ஆணையர்கள், 11 காவல் உதவி ஆணையர்கள், 25 காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேரோட்டத்தை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக மாற்று உடையிலும் போலிசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். ஒலிப்பெருக்கி மூலம் வாகனங்கள் சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோனியம்மன் கோவில் அமைந்துள்ள டவுன்ஹால் பகுதி மற்றும் தேர் சுற்றி வரும் ஒப்பணக்கார வீதி, பெரியக்கடை வீதி, வைசியாள் வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் இருக்க, உயர்ந்த கட்டிடங்கள் மேலிருந்தும் போலிசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.