மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி ‘சாம்பியன்’

கோவையில் முதல்முறையாக நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், கோவை மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நிர்மலா மகளிர் கல்லூரி அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. பேட்டிங் செய்த யாழினி மருதாச்சலம் அதிகபட்சமாக 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். இதேபோல் சந்தியா 56 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார்.

182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நிர்மலா மகளிர் கல்லூரி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவி ஆல்பெர்டின் கிரனாப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாணவி யாழினி மருதாச்சலம் இப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி மகளிர் அணியினரை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மற்றும் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் லட்சுமி நாராயணசுவாமி பாராட்டினார்.

இதேபோல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குநர் வடிவேலு, சுதா ஆகியோரும் வாழ்த்தினர்.