டாப்சிலிப்பில் இருந்து வனத்தை விட்டு வெளியேறிய மக்னா யானை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானை ஒன்று அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை பாலக்கோடு கொண்டு செல்லப்பட்டது. கும்கி யானை உதவியுடன் பொதுமக்களை மிரட்டிய யானையை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த யானை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

அந்த மக்னா யானை, கடந்த சில தினங்களாக வனப்பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை 5 மணிக்கு திடீரென யானை வனப்பகுதியை விட்டு வெளியேறியது. சேத்துமடை வழியாக வந்த யானை நல்லூத்துக்குழி, காக்காபுதூர் வழியாக சென்றது. அந்த யானை கிராமப் பகுதியிலேயே சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் 4 குழுவாக பிரிந்து மக்னா யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கிராமங்களை யானை கடந்து செல்வதை மக்கள் அவ்வப்போது பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். யானை மிரண்டு தாக்கும் முன்பு அதனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.