சிரிப்பு உண்மையில் சிறந்த மருந்தா?

சிரிப்பு மிகச் சிறந்த மருந்தாக அறியப்படுகிறது, ஆனால் அதுவே ஒரு தளையாகவும் மாறக்கூடும். உங்கள் சிரிப்புக்கு ஆதாரமாக இருப்பதில் ஏன் கவனம் செலுத்தவேண்டும் என்பதை சத்குரு விளக்குகிறார்.

ஆனந்தத்தின் ஒரு வெளிப்பாடுதான் சிரிப்பு

சத்குரு: சிரிப்பே ஒரு சிறந்த மருந்து என்று மக்கள் மிக நீண்ட காலமாகக் கூறி வந்திருக்கின்றனர். ஆனந்தமான மக்கள் இயல்பாகவே தங்களைக் குணப்படுத்திக்கொள்கிறார்கள் என்று எங்கோ, யாரோ ஒருவர் புரிந்துகொண்டார். நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா என்பது உங்கள் உடல் எவ்வளவு திறமையாக செயல்படுகிறது என்ற கேள்விக்குட்பட்டது.

அது நன்றாகச் செயல்பட்டால், அதை ஆரோக்கியம் என்று அழைக்கிறோம். இல்லையென்றால், நோயுற்றதாகக் கூறுகிறோம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் உடல் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. எனவே அப்போது நலமுடன் இருப்பது இயல்பானதாக இருக்கும். உங்களை குணப்படுத்துவது சிரிப்பு அல்ல; ஆனந்தம்தான் உங்களை குணப்படுத்துகிறது, ஆனால் சிரிப்பு என்பது, ஆனந்தத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டதாகியுள்ளது.

ஆனந்தம் என்றால் நீங்கள் எப்போதும் “ஹஹாஹா” என்றுதான் இருக்க வேண்டும் என்று நம்பினால், நீங்கள் மிகவும் கேலிக்குரியவராக இருக்கப் போகிறீர்கள், ஏனென்றால் எல்லா வகையான சூழ்நிலைகளிலும் நீங்கள் சூழ்நிலையின் ஆழத்தையும் பரிமாணத்தையும் உணராமல் “ஹஹாஹா” என்றே இருப்பீர்கள். ஆனந்தம் என்றால் சிரிப்பு என்பது பொருளல்ல. ஆனந்தமானது ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் வெளிப்பாட்டைக் காணமுடியும். அது எந்தக் குறிப்பிட்ட வழியிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிரிப்பு ஒரு வெளிப்பாடாக இருக்கலாம், மௌனம் மற்றொரு வெளிப்பாடாக இருக்கலாம். ஆனந்தம் உங்களுக்கு அசைவற்ற தன்மையைக் கொண்டுவரலாம், தீவிரமான செயல் தன்மையைக் கொண்டுவரலாம் அல்லது உங்களுக்குக் கண்ணீரை வரவழைக்கலாம்.

கௌதம புத்தர் ஆனந்தத்தின் உருவமாகவே இருந்தபோதிலும், யாரும் எந்த நேரத்திலும் அவர் சிரிப்பதைக் கண்டதில்லை. அவர் ஒருபோதும் சத்தமாகச் சிரித்ததில்லை, வெளிப்படையாகப் புன்னகைத்ததும் இல்லை; அவரது புன்னகை கூட ஒரு சிறிய விஷயமாகத்தான் இருந்தது. ஆனந்தம் என்பது புன்னகை அல்லது சிரிப்பு என்று பொருளல்ல. ஆனந்தம் என்றால் நீங்கள் வாழ்வின் மையத்தில் இருக்கிறீர்கள் என்பது பொருள்.

ஆனந்தம் என்றால், அடிப்படையில் நீங்கள் வாழ்வில் ஆழமாக வேரூன்றி இருக்கிறீர்கள், மேற்பரப்பில் அல்ல. நீங்கள் மூலத்திலேயே வேர் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள். மக்கள் எப்போதும் அதை மற்றொரு வழியில் அணுக முயற்சிக்கிறார்கள். யாரோ ஒருவர் மது அருந்துவது ஆனந்தம் என்று நினைக்கிறார், வேறொருவர் சிரிப்பது ஆனந்தம் என்று நினைக்கிறார். அவர்கள் சிரிக்கும் மக்களின் சமூகத்தை உருவாக்கியுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வீதிகள் எங்கும் அவர்கள் “ஹஹாஹா, ஹூஹூஹூ, ஹேஹே!” என்பதைப்போல் இருப்பார்கள். ஆரம்பத்தில் இது வேடிக்கையாக இருக்கும், ஆனால் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் ஒருவருடன் நீங்கள் வாழ வேண்டியிருந்தால், அந்த சிரிப்பைத் தடுப்பதற்காகவே ஒரு நாள் அவரைக் கொன்றுவிட விரும்புவீர்கள்!

சிரிப்பு என்பது ஒரு விளைவாகும்

இப்போதெல்லாம் சிரிக்கும் யோகா என்றழைக்கப்படும் ஒரு பரிதாபகரமான “யோகா” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டு, நீங்கள் “ஹேஹே” என்று சொல்ல, நானும் பதிலுக்கு “ஹேஹே” என்று சொல்லும் இந்த வழிமுறை பைத்தியக்காரத்தனமானது. சமீபத்தில் நான் அமெரிக்க நல்வழிகாட்டிப் புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த ஆசிரியர் ஒரு நாளைக்கு பத்து நிமிடங்கள் நீங்கள் சிரிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். இது உங்களை வெகு விரைவில் மனநலப் பிரிவுக்கு வழிகாட்டும்!

நீங்கள் தோட்டத்தில் பூக்களை விரும்பினால், பிளாஸ்டிக் பூக்களை வாங்கி அவற்றை அங்கே பொருத்துவது கிடையாது. பூக்களுடன் தொடர்பில்லாத சிலவற்றை நீங்கள் செய்ய வேண்டும். அதாவது மண், உரம், நீர், சூரிய ஒளியை சரியான விதத்தில் கையாளவேண்டும். இவை எதுவுமே பார்ப்பதற்கோ, உணர்வதற்கோ அல்லது முகர்வதற்கோ பூக்களைப் போல இல்லை, ஆனால் நீங்கள் இவற்றை சரியாகக் கையாண்டால் பூக்கள் தானாகவே வரும். ஆகவே, “ஒவ்வொரு நாளும் நான் சிரிக்க வேண்டும்” என்கிற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பதால் மட்டும் சிரிப்பு வந்துவிடாது. உங்களுக்குள் ஒருவித இனிமையான நிலையில் நீங்கள் இருந்தால், ஏன் என்றே அறியாமல் உங்கள் முகத்தில் புன்னகை பரவும்.

ஆனந்தம் என்பது நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒரு செயல் அல்ல. உங்களுக்குள் இருக்கும் அடிப்படையான உயிரின் செயல்முறையை நீங்கள் சீர்குலைக்காமல் இருந்தால், ஆனந்தம் என்பது இயற்கையான வெளிப்பாடாகும். ஆனந்தம் ஒரு சாதனை அல்ல, ஆனந்தம் உங்கள் உண்மையான ஆதி நிலை. யோகாவில், ஒரு மனிதனை ஐந்து உடல்களின் அடுக்குகளாகப் பார்க்கிறோம்: அன்னமய கோசா, பிராணமய கோசா, மனோமய கோசா, விஞ்ஞானமய கோசா மற்றும் ஆனந்தமய கோசா. “ஆனந்தா” என்ற வார்த்தையை பரம ஆனந்தம் என்று பொருள் கொள்ளலாம். எனவே உங்கள் ஆழமான மையம் ஆனந்தமே. உடலின் முதல் மூன்று பரிமாணங்களாகிய உடல், மனம் மற்றும் சக்தி உடல் ஒரே நேர்க்கோட்டில் இருந்தால், முழுமையான ஆனந்தமயமாகிய உள்நிலை மையமானது இயல்பாகவே வெளிப்பாடு காணும்.