ஈரோடு கிழக்கை சுழற்றும் ஜாதி அரசியல் கணக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியில் தினமும் மாறுபட்ட புள்ளிவிவரங்களுடன் கூடிய வாக்காளர்களின் எண்ணிக்கை கொண்ட ஜாதி பட்டியல் வெளியாகி வருவது அரசியல் கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஜாதியும், அரசியலும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். இவை இரண்டும் இரண்டர கலந்துவிட்டன. ஜாதிகள் இல்லையடி பாப்பா என மழலை வகுப்பில் கற்றுக்கொடுத்தாலும் சமுதாயத்தில் எங்கு சென்றாலும் ஜாதி முக்கிய இடம் பெறுகிறது. அதேபோல, தேர்தல் நேரத்தில் நிறுத்தப்படும் வேட்பாளரின் ஜாதியை பார்த்து வாக்களிக்கும் முறை இப்போதும் உள்ளது. இதை யாரும் வெளிப்படையாக பேசாவிட்டாலும் இது தேர்தல் களத்தில் எதிரொலிப்பதை பார்க்கலாம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் என முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தல் பணியாற்ற, பகுதி வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் வாக்காளர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளனர். அந்தந்தப் பகுதிகளில் தேர்தல் பணிமனை அமைத்து, அப்பகுதி வாக்காளர்களை தினமும் சந்தித்து வாக்கு சேகரிப்பது இவர்கள் பணியாக உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கில் ஜாதி வாரியாக உள்ள வாக்குகள் தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து உலா வரத் தொடங்கியுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களில், ஒவ்வொரு ஜாதிக்குமான வாக்கு சதவீதம் ஏறியும், இறங்கியும் இருப்பதால், எது உண்மையான புள்ளிவிபரம், இது வாக்குப்பதிவில் எதிரொலிக்குமா என தேர்தல் பணிக்கு வந்துள்ள வெளிமாவட்ட அரசியல் பிரமுகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்களும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில், செங்குந்த முதலியார் சமுதாயம் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது என அனைத்து புள்ளிவிவரம் கூறுகின்றன. அடுத்தது, கொங்கு வேளாளக் கவுண்டர் மற்றும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் அடங்கிய சிறுபான்மைப் பிரிவு வாக்கு சதவீதத்தை ஒவ்வொரு புள்ளிவிவரமும் கூட்டியும், குறைத்தும் காட்டுவதால் அரசியல் கட்சியினர் குழம்பி வருகின்றனர்.

செங்குந்த முதலியார் 35 சதவீதம், கொங்கு வேளாளர் 17 சதவீதம், சிறுபான்மையினர் 17 சதவீதம் இருப்பதாகவும், இவர்கள் தவிர அருந்ததியர் 6 சதவீதமும், செட்டியார், நாயுடு, நாயக்கர், பிள்ளை, வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாடார், பிராமணர் உள்ளிட்ட பிரிவினர் 1 சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதோடு, இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 3 சதவீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி நகரம் சார்ந்த தொகுதி என்பதால், ஜாதி ரீதியாக வாக்குகள் பதிவாகாது என்ற கருத்தும் நிலவுகிறது. புள்ளி விவரங்களின்படி, செங்குந்த முதலியார் சமுதாயம் இத்தொகுதியில் அதிகமாக இருந்தாலும், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவில், ஜாதி ரீதியான அம்சங்கள் எதிரொலிக்குமா என மாவட்ட திமுக துணை செயலர் செந்திலிடம் கேட்டபோது,“ஈரோடு கிழக்கு தொகுதி நெசவாளர்களை அதிகம் கொண்ட தொகுதி. ஆனால், முறையாக கணக்கெடுப்பு எதுவும் இல்லாததால் உண்மையான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை. தேர்தல் நேரம் என்பதால் ஒவ்வொருவரும் தங்களது விருப்பத்துக்கேற்ப ஜாதி புள்ளி விவரங்களுடன் கூடிய பட்டியலை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திமுக ஆட்சியின் பிரதிபலிப்பு தேர்தலில் எதிரொலிக்கும். எனவே, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும்” என்றார்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஜாதி எது? 

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, அரசியல் களத்தில் ஜாதி முக்கிய குறியீடாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தங்களது கட்சியில் மாவட்டச் செயலர்கள், அமைச்சர்கள், தொகுதி வேட்பாளர்களை நிறுத்தும்போது ஜாதியை வைத்து தான் தேர்வு செய்கின்றனர்.

ஒரு சில நகர்புற பகுதிகளில் மட்டுமே ஜாதி எடுபடுவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 200 தொகுதிகளில் ஜாதி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வெற்றி தோல்விக்கு ஜாதி மட்டுமே காரணம் அல்ல. மக்கள் பல்வேறு காரணிகளை பார்த்து சீர்தூக்கி தான் வாக்கு செலுத்துகின்றனர். இருப்பினும், வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு ஜாதியின் தாக்கம் இருந்து வருகிறது.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொங்கு வேளாளர் சமூகத்தினர் அரசியல் அதிகாரத்தில் இருப்பதாலும், அதிமுகவின் தலைமையில் இப்போது கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி இருப்பதாலும் பிற சமூகத்தினர் எதிர்கட்சிகளுக்கு குறிப்பாக திமுகவை நோக்கி திரும்பியுள்ளனனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொங்கு வேளாளருக்கும், செங்குந்த முதலியாருக்கும் தொழில் ரீதியாக போட்டி இருப்பதால் இது அரசியல் களத்திலும் நிச்சயம் எதிரொலிக்கும். செங்குந்தர் முதலியார் சமூக வாக்குகள் இம்முறை காங்கிரஸ் நோக்கி திரும்புவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் என்றார் ரிஷி.

ஈரோடு கிழக்கு: வார்டு கவுன்சிலர் சமூக விபரம் 

கொங்கு வேளாளர் – 9

முதலியார் – 5

வன்னியர் – 5

தலித் – 5

முஸ்லிம் – 2

போயர் -1

முடவாண்டி கவுண்டர் -1

சோழிய வெள்ளாளர் – 2

பிள்ளை – 1

மருத்துவர் – 1

யாதவர் – 1