கோவை ரயில் நிலையத்திலிருந்து ஆப் மூலம் ஆட்டோ புக் செய்யும் வசதி அறிமுகம்

தமிழகத்தில் முதன் முறையாக கோவை ரயில்நிலையத்தில் வாட்ஸப் மற்றும் ஸ்கேன் கோட் வாயிலாக ஆட்டோ புக் செய்யும் ‘ஊர் கேப்ஸ்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் ரயில் நிலைய சந்திப்பில் செயலி வழியே ஆட்டோ புக் செய்யக்கூடிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பணிகளை சேலம் கோட்டத்தை சேர்ந்த வணிகப்பிரிவு அதிகாரிகள் எடுத்துவந்த நிலையில், கோவையில் செயல்பட்டு வரும் ஊர் கேப்ஸ் நிறுவனம் இதற்கான ஆணையைப் பெற்றுள்ளது.

கோவை ரயில்நிலையத்தின் பின்புறம் உள்ள இரண்டாவது நுழைவு வாயிலில் இந்த சேவைக்கான கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் பயணிகள் தங்களுக்கான ஆட்டோவை பேரம் பேசாமல் எடுத்து பயணிக்க இயலும்.

முன்னதாக இந்த சேவையை தெற்கு ரயில்வேயின் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் (சேலம் கோட்டம்) ஹரிகிரிஷ்ணன் துவக்கி வைத்தார். ‘ஊர் கேப்ஸ்’ தலைமை செயல் அதிகாரி மரிய ஆண்டணி உடனிருந்தார்.