ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ஆதியோகி ரதம் கிராமங்கள்தோறும் பயணித்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்தனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன் கூடிய 5 ரதங்கள் கடந்த மாதம் கோவையில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின் 4 திசைகளில் பயணத்தை தொடங்கின.

அதில் ஒரு ரதம் பொங்கல் தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தது. பாரியூர், சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், ஆப்பகூடல், கூகலூர் என பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிப்ரவரி 1-ம் தேதி கோபிக்கு வருகை தந்தது.

கோபியில் இருந்து கொடிவேரி, அரசூர், பெருந்துறை, பங்களா புதூர் போன்ற இடங்களுக்கு செல்லும் இந்த ரதம் பிப்ரவரி 10-ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் இருக்கும். பின்னர், அங்கிருந்து கோவைக்கு பயணிக்கும்.

இந்த யாத்திரையில் பிப்ரவரி 18-ம் தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும், கோபியில் உள்ள லிங்கபைரவியிலும் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.