வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பற்றி கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்பு வாரிய இயக்குனர், வேளாண் மற்றும் தோட்டக்கலை விரிவாக்க அலுவலர்கள், தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அறிவியல் ரீதியாக தேனீ வளர்ப்பதில் சிறந்த நுண்ணறிவை பெறும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டனர்.

கருத்தரங்கினை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தமிழ்வேந்தன் தலைமையேற்று நடத்தினார். அதில் அவர் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தையும், தேனின் தேவையை அதிகப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.

தேசிய தேனீ வளர்ப்பு வாரியத்தின் இயக்குனர் நவீன் பாட்டில் கருத்தரங்கை துவக்கி வைத்து, தேனின் தரத்தை உயர்த்துவது குறித்தும் தேனிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பெறுவதைப் பற்றியும் விளக்கினார்.

கருத்தரங்கின் முக்கியத்துவத்தினை பயிர் பாதுகாப்பு மையம் இயக்குனர் சாந்தி விளக்கினார். வேளாண் பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.

இக்கருத்தரங்கின் மூலம் தேனீ வளர்ப்பாளர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு மற்றும் தேன் தரத்தை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டல் மற்றும் விவசாய வணிகத்தை விஞ்ஞான முறைகளில் ஊக்குவித்தல் பற்றி கலந்துரையாடப்பட்டது.