கங்கா மருத்துவமனையின் மைக்ரோ சர்ஜரி லேப் 1500 பேருக்கு பயிற்சி அளித்து சாதனை

கங்கா மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மைக்ரோ சர்ஜரி லேப், வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உள்ள 142 நகரங்கள் உட்பட 68 நாடுகளில் இருந்து 1500 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் ராஜ சபாபதி கூறுகையில், மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை என்பது 1.0 மிமீ விட்டம் கொண்ட ரத்த நாளங்களை இணைப்பதை. இதில் 1.0 மிமீ அளவுள்ள சிறிய ரத்த நாளங்களில் 4 முதல் 5 தையல்கள் போட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நுண்கலையை கற்பிக்க எங்கள் மருத்துவமனையில் கடந்த 2000–ம் ஆண்டு இந்த மைக்ரோ சர்ஜரி லேப் துவக்கப்பட்டது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு வார காலம், அறுவை சிகிச்சை அரங்கில் உருவகப்படுத்தப்பட்ட நிலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கங்கா மருத்துவமனையில் உள்ள மைக்ரோ லேப் உலகின் மிகச் சிறந்த ஆய்வகங்களில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் 142 நகரங்கள் மற்றும் 68 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்றது கோவை நகருக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இங்கு பயிற்சி பெற்ற 1500 பேரில், 164 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இங்கிலாந்திலிருந்தும், 82 அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமெரிக்காவிலிருந்தும் வந்திருந்தனர். இந்த மைக்ரோ சர்ஜரி ஆய்வகத்தில் தற்போது 4 நுண்ணோக்கிகள் உள்ளன. ஒரே நேரத்திலும் 4 பேர் பயிற்சி பெறலாம். இதில் முதல் 1000 பேருக்கான பயிற்சி என்ற நிலையை எட்ட சுமார் 18 ஆண்டுகள் ஆனது, ஆனால் அடுத்த 500 பேர் 5 ஆண்டுகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சியை பெற்ற 4 பேரில் 3 பேர் புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பேர், புதுடெல்லியில் உள்ள டாக்டர் ஆர்எம்எல் மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் போபாலில் இருந்து ஒருவர் என பயிற்சி பெற்றுள்ளனர். நுண் அறுவை சிகிச்சை பயிற்சிக்காக வரும் மருத்துவ நிபுணர்களுடன், மருத்துவம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் பயிற்சி பெறவும் 70 நாடுகளில் இருந்து மொத்தம் 2800 அறுவை சிகிச்சை நிபுணர்கள் இம்மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் உலகம் முழுவதும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையில் எங்கள் மருத்துவமனையும் முக்கிய பங்கு வகிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று டாக்டர் ராஜ சபாபதி தெரிவித்தார்.