கோவையில் நடமாடும் உணவு ஆய்வகம் துவக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் மீது புகார் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த மாதம் புதிதாக 4 நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கோவையில் புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரமும் கேள்விக்குறியாகி வருகிறது.

உணவு பொருட்களில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும், கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவு பொருட்களை விநியோகம் செய்வதாகவும் நாளுக்கு நாள் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே நடமாடும் உணவு ஆய்வகம் மூலம் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மதிப்பீடு சான்று தரப்படுகிறது. மேலும் மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.