கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கரியமலை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. இங்கு கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்பகுதியில் கல்குவாரி அமைந்தால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து மனுவில் கூறியிருப்பதாவது: கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தைச் சுற்றி மங்கலகரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கல்குவாரி அமைந்தால், அங்கு பாறையை தகர்க்க வெடி வைக்கும் போது தூசி எழுவதோடு, நில அதிர்வு ஏற்படும். அதோடு, எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் குவாரி அமைப்பதாகக் கூறப்படும் வழியாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்து. மலைப்பகுதியில் வெடி வெடிக்கும் போது கற்கள் சிதறி விழும் அபாயமும் உள்ளது. உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ள இந்த குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மனுவில் கூறியுள்ளனர்.