ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிக்கு ‘இளம்தொழில் முனைவோர் விருது’

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்கம், புதுமைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘முன்னாள் மாணவர் நேருக்கு நேர் சந்திப்பு’ மற்றும் ‘இளம் தொழில்முனைவோர் விருது வழங்குதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம். கன்சல்டன்ட் நிறுவனர் மற்றும் முன்னாள் மாணவர் முரளி மனோகர் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘புதிய தொழில் வாய்ப்புகள்’ குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது: மாணவர்களின் வாழ்வில் தொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியம். அதற்கு கல்லூரியில் இருந்தே தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கில அறிவே அடிப்படை. பெரு நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் இத்தகுதியை எதிர்பார்க்கின்றன. வேலைவாய்ப்பு எங்கு வேண்டுமானாலும் அமையலாம். அவற்றில் உங்களை நிறுத்திக் கொள்ள அடிப்படை மொழியறிவு அவசியம். ஆங்கிலத்தில் எழுத, படிக்க, உரையாட பழகிக்கொள்ள வேண்டும். தாய்மொழியறிவிலும் சிறந்து விளங்க வேண்டும்.

உங்களுடைய சிந்தனை, செயல் அனைத்து தாய்மொழி வழியாக இருப்பதே சிறந்தது. நம்முடைய மூளை அப்படிதான் சிந்திக்கிறது. இவையனைத்திற்குமான களம் கல்லூரி தான். வேலைவாய்ப்புகளை கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமாகவே பெற்றுவிடுவது நல்லது. படித்து முடித்து விட்டுச் சென்றால் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

வேலைவாய்ப்பு 50 சதவீதம் திறமை, 50 சதவீதம் தகவல் தொடர்பின் அடிப்படையிலேயே அமையும். உங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறந்த பரிந்துரைகளின் பேரிலேயே வேலை கிடைக்கும். அத்தகைய நற்பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து பி.பி.ஏ. சி.ஏ. இரண்டாமாண்டு மாணவி ரூத் இவாஞ்சலினுக்கு, ‘இளம் தொழில்முனைவோர் விருது’ வழங்கப்பட்டது. இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பிரபு, பொருளாளர் ஷோபனா மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.