யார் செய்தது தவறு : ஆளுநரா  முதல்வரா

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது நடந்த கசப்பான சம்பவத்தில் தவறு செய்தது ஆளுநரா? அல்லது முதல்வரா? என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜன.9 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்த பிறகு, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவை கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வாடிக்கை தான் என்றாலும், இந்த ஆண்டு ஆளுநர் உரையை முன்னிட்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் சற்று பரபரப்பாக இருக்கிறது.

இது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா உள்பட 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், இது தொடர்பான விவாதமும் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் எழுந்தது. தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து ஆளுநர் ரவி தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் சர்ச்சையாகி வருகின்றன.

சனாதானத்துக்கு ஆதரவான கருத்துகள் தொடங்கி, இந்தி மொழி, வர்ணாசிரமம், ரிஷிகள் வரை அவர் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் பல்வேறு தருணங்களில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. அண்மையில் கூட ஆளுநர் ரவி ஒரு நிகழ்ச்சியில், “தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக தமிழ்நாட்டில் பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்திருந்தன.

ஆளுநர் உரை

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது ஆளுநருக்கு எதிரான மனநிலை இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து திமுக தவிர்த்து, அதன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரை என்பது அரசின் ஒரு கொள்கை விளக்கக் குறிப்பு. இதில் அரசின் அம்சங்களே பெரும்பாலும் இடம்பெற்று இருக்கும்.  இந்த உரையைப் படிக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் கொள்கைகளைப் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது, என்ற வரியை ஆளுநர் ரவி சட்டமன்ற உரையிலிருந்து புறக்கணித்துள்ளார். ஆளுநர் தனது உரையில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சமத்துவபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவது, காலை சிற்றுண்டி திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, குறைந்த நேரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என அரசின் திட்டங்கள் குறித்து சுமார் 50 நிமிடங்களுக்குப் பேசினார். தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசித்ததைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அப்பாவு, உரையை தமிழில் வாசித்தார்.

ஆளுநர் தவிர்த்த பகுதிகள் என்ன?

ஆளுநர் தனது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.  இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியை வாசிக்காமல் தவிர்த்துள்ளார். இதேபோல், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் வாசிக்காமல் தவிர்த்தார்.

இதைத் தொடர்ந்து அவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் உரையானது தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு வரும் ஆளுநரின் செயல்பாடுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருந்தாலும், சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை.

பேரவையில் மிகவும் கண்ணியத்தோடு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்த ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்துகொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கேகூட அவர் மாறாக நடந்துகொண்டு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

வெளியேறிய ஆளுநர்

மேலும், சட்டப் பேரவை விதி 17ஐ தளர்த்தி, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும். இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக ஆளுநர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்ற தீர்மானங்களை முன்மொழிவதாகவும் பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பேரவை முடிவு பெறுவதற்கு முன்பே, ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர், சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் உரையைத்தான் கேட்க வந்தோம். முதல்வர் உரையை அல்ல. ஆளுநர் பேரவையில் இருக்கும்போது முதல்வர் பேசுவது என்பது அவை மரபுக்கு எதிரானது. ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆளுநர் வாசித்தது வெற்று உரை,” என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வாரிசு அரசியலைப் பற்றி மக்கள் அதிகம் பேசாமல் பார்த்துகொள்ளவும், ஆளுநருக்கு எதிர்ப்பு என்ற கேவலமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆளுநரை தங்களின் சித்தாந்தத்தைப் புகழ்பாடும் நபராக இந்த அரசு நினைக்க முடியாது. எவையெல்லாம் அரசின் திட்டங்களோ, செயல்களோ அதைத்தான் ஆளுநர் குறிப்பிடுவார். ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு எதிரானது. ஆளுநர் மீதான தனிப்பட்ட தாக்குதல் இது. ஆளுநரைக் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவதுதான் ஜனநாயகமா?” என்றார்.

தேசிய கீதத்துக்கு அவமதிப்பு

இதனிடையே, அவை நிறைவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது அவமதிக்கும் செயல் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டப்பேரவை மரபுகளுக்கு முரணான வகையில் ஆளுநர் உரையை வாசித்துள்ளார் என்பதால்தான் முதல்வர் தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜன.5 ஆம் தேதியே முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று ஆளுநர் உரையின் வரைவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜன.7 ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார். அப்படியிருக்கும் சூழலில் அவர் படித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர், சமத்துவத்துகாக போராடிய மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்துள்ளார்.

சமூக நீதி, சமத்துவம், பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய வார்த்தைகளை அவர் தவிர்த்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் வெளியேறியது, தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். தேசிய கீதம் வாசிப்பதற்கு முன்பாக அதிமுக வெளியேறியது தவறானது” என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் உரை சர்ச்சை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பேரவைத் தலைவர், “ஆளுநர் உரையில் பல பகுதிகளை விட்டும் புதிதாக சில பகுதிகளைச் சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். அது தவறு என்பதால் முதல்வர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை சபை முழு மனதாக ஏற்றுகொண்டது. மாநில சட்டப்பேரவைகளில் ஆளுநர் உரையாற்றுவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 175,176 அனுமதி வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் அவருக்கு அந்த உரிமையை வழங்குகிறது.

அம்பேத்கர் தலைமையில்தான் அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே அவர் உச்சரிக்கவில்லை. திராவிட மாடல் என்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தமிழ்நாடு என்றுதான் உள்ளது. ஆனால் தமிழகம் என்று சொல்வதுதான் நன்றாக உள்ளது எனக் கூறுவது அவரது பதவிக்கு ஏற்புடையதா எனச் சிந்திக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் ஏன் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை,” என்றார்.

மேலும், “ஆளுநர் உரையை ஒப்புதலுக்கு அனுப்பியபோதே, சில வார்த்தைகளை நீக்குங்கள் என்று கூறியிருந்தால் அதற்கு ஏற்ப முதல்வரும் இந்த அரசும் நடவடிக்கை எடுத்திருக்கும். அதையெல்லாம் விடுத்து பொதுமேடைக்கு வந்துவிட்டுப் பேசுவது நியாயமல்ல. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்குகிறார்,” என்றார்.

அதேபோல், “ பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து செல்லும் தீர்மானங்களுக்கும் உடனடியாக ஒப்புதல் வழங்குகிறார். ஆனால், தமிழகம் போன்ற முற்போக்கு மாநிலங்களில் இருந்து கொடுக்கும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்கின்றனர்,” என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தார்.

ஆளுநரின் செயல் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்த அப்பாவு, “உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநராக இருப்பவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீப் தங்கர் ஆளுங்கட்சிக்கு விரோதமாக வெளிபடையாகச் செயல்பட்டார். அவருக்கு குடியரசு துணைத் தலைவர் பதவி கிடைத்தது. அப்படி ஏதும் நோக்கம் உள்ளதா எனத் தெரியவில்லை,” என்ற விமர்சனத்தையும் அப்பாவு முன்வைத்தார்.

ஆளுநர், முதல்வர் இடையே இப்போது எழுந்துள்ள மோதலுக்குப்பின் அரசியல் காரணங்கள் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. ஓராண்டுக்கு முன்பே அதற்கான ஆயத்தப்பணிகளை திமுக தொடங்கியுள்ளது. எனவே, பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியை தீவிரப்படுத்துவதற்காகவே ஆளுநருடன் மோதல் போக்கை திமுக தொடங்கியிருக்கிறது.

பாஜக எதிர்ப்பை வலுப்படுத்தினால் தமிழகத்தில் வாக்கு அறுவடை செய்யலாம் எனும் சூத்திரத்தை முதல்வர் ஸ்டாலின் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் தான் இதுபோன்ற மோதல் சம்பவங்களை திமுக திட்டமிட்டே காய்நகர்த்தத் தொடங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கூட்டணி கட்சிகளே திமுகவை தூண்டிவிடுகின்றன

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை விட அவரது கூட்டணி கட்சிகளே பாஜக எதிர்ப்பில் மிக அதிக வேகம் காட்டுகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, விசிக சட்டப்பேரவை கட்சித் தலைவர் சிந்தனைச் செல்வன், தமிழக வாழ்வுரிமை கட்சி பேரவை உறுப்பினர் வேல்முருகன்,  திமுக கூட்டணிக்கு முயற்சிக்கும் பாமக சட்டப்பேரவை கட்சி தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வந்தவுடனேயே அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மறுநாளே திமுக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநரை யாரும் விமர்சித்து பேச வேண்டாம் எனவும் கூறியுள்ளார், பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த பிரச்சினையை கடந்து சென்றுள்ளார். திமுக சார்பில் குடியரசுத் தலைவரிடம் ஆளுநரை திரும்ப பெறக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு சடங்காகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த பிரச்சனையும் இதோடு முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பே அதிகம்.

குறிப்பாக ஆளுநர் தமிழகம் என்று கூறுவதும், திமுக திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுவதும் தேர்தல் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

என்றார் ரிஷி.