‘கிணற்றை காணவில்லை’ கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவை அடுத்த பேரூர் தீத்திபாளையம் விவேகானந்தர் நகரை சேர்ந்த பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

மனை பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு கம்பி வேலியிட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.