கே.ஐ.டி கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) “சிறந்த ஆசிரியர் விருது” என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகையில்: ஆசிரியர்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு முதலில் தங்களை நேசிக்க வேண்டும். அடுத்தவரின் பிம்பத்தை பின்பற்றி அவ்வாறு செயல்பட்டு நாமும் முன்னேற வேண்டும் என்பதை நினைத்துவிட்டு, தம்மால் முடிந்ததை வைத்துக் கொண்டு வெற்றி பெற சிந்திக்க வேண்டும்.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவையும், அன்பையும் ஆசிரியர்கள்தான் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் கவனச்சிதறல், சமூக ஊடகம் போன்ற தவறான பழக்கத்தை கைவிட வேண்டும் என எண்ணும்போதே, மற்றொரு நல்ல பழக்கத்தை அதற்கு மாற்றாக தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலையில் நல்ல உடல் நலம் சார்ந்த மனநிலையில் இருக்கும் செயலை தேர்வு செய்யுங்கள். அதுவே அன்றைய நாள் முழுதும் உங்களுக்கு செயல் திறனை அளிக்கும். கடைசி வரை நீ, நீயாகவே இரு அடுத்தவர்களுக்காக வாழ்வதை விட்டு விட்டாலே 100 சதவீதம் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 510 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.