உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சேவை: 27 நதிகளில் 4,000 கி.மீ. பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13 ஆம் தேதி, உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த கப்பல் இந்தியாவின் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 நதிகளில் 50 நாட்களில் 4,000 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ளும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடற்கரை மற்றும் நீர்வழித் தடங்களில் நடைபெறும் வர்த்தகம் 3.5 % மட்டுமே உள்ளது. இதுவே சீனாவில் 47 சதவீதம், ஐரோப்பிய நாடுகளில் 40 சதவீதம் அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுகிறது.

எனவே, இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இந்தியா முழுவதும் சுமார் 111 நதிகளை தேசிய நீர் வழித்தடங்களாக மாற்றி சரக்கு, பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் உலகின் மிக நீண்ட தூர நதிவழி சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்த சொகுசு கப்பல் சேவையை கொல்கத்தாவை சேர்ந்த அன்டாரா நிறுவனம், கங்கை விலாஸ் என்ற பெயரில் இயக்க உள்ளது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தொடங்கி பயணம் செய்யும் இந்த சொகுசு கப்பல், கொல்கத்தா மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா வழியாக அசாமின் திப்ருகர் வரை செல்ல உள்ளது. செல்லும் வழியில், காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தர வனக் காடுகள் உட்பட 50 சுற்றுலா தலங்களில் கப்பல் நின்று செல்லும்.

 

தகவல்: இந்து தமிழ் திசை