இந்துஸ்தான் கல்லூரி மாணவர் குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ஹர்ஷித் பாபு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு 2023 முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், குடியரசு தலைவர் தேசிய கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்கு சிறப்புரையாற்றுவார். அதன் பின்பு நடைபெறும் அணிவகுப்பில் முப்படை வீரர்கள், காவல்துறை வீரர்கள், என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பல்வேறு சீருடை வீரர்கள் குடியரசுத்தலைவருக்கு மரியாதையை செலுத்துவர்.

இம்முகாமில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து சிறந்த என்.சி.சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் துறையில் பயிலும் மாணவர் ஹர்ஷித் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கடந்த ஜூலை மாதம் முதல் கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற சுமார் 10 க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்களில் பெஸ்ட் கேடட் பிரிவில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டு மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி முகாமில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அதன் பின்பு நடைபெற்ற பேச்சுப்போட்டி, குழு உரையாடல், துப்பாக்கி சுடுதல், கலை நிகழ்ச்சி, எழுத்துத் தேர்வு, விமான பயிற்சி ஆகியவற்றில் பங்கு பெற்று முதல் மாணவராக தேர்வு பெற்றுள்ளார். இதனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவிற்கு விமானப்படை பிரிவில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குனகரத்தின் சார்பாக பெஸ்ட் கேடட் பிரிவில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவரின் திறமையை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஸ் பிரபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், கல்லூரியின் முதல்வர் ஜெயா, என்.சி.சி அலுவலர்கள் பிளையிங் ஆபிஸர் ஜெய்னுலாபிதீன், லெப்டினன்ட் ரவிக்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.