“தமிழ்நாட்டில் 250 நேச்சுரோபதி கேந்திரா கிளினிக் உருவாக்க இலக்கு”

கோவையில் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, வாய்ஸ் ஆப் சக்தி, சிவாஞ்சலி டிரஸ்ட் ஆகியவை இணைந்து புதிய நேச்சுராபதி திட்ட மையத்தை கோவையில் துவங்கியுள்ளன.

இதுகுறித்து புது டெல்லி, ஆயூஷ் இயற்கை யோகா கேந்திரா கிளினிக் தலைவர் டாக்டர் சேவக் விஜய் கூறும்போது: மாற்றம் பெற்று வரும் கால நிலை, உலகளவில் ஏற்பட்டு வரும் பல்வேறு வகையான நோய்கள், மன அழுத்தம் போன்றவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையிலான இயற்கை முறையிலான தீர்வுகளை தேடி வருகிறோம். இதற்கான கல்வி முறை, ஆராய்ச்சிகள், மருத்துவ சிகிச்சை முறை, யோகா போன்றவை அவசியமாகிறது. இதற்கென மக்கள் எளிதாக அணுகும் வகையில், நேச்சுராபதி யோகா கேந்திரா மாதிரி கிளினிக் திட்டம் உருவாக்கப்பட்டது.

2019 ம் ஆண்டில் கோவை, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த ஆய்வரங்கில் இது, கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்வடிவம் பெற்றது. மூன்று ஆண்டுகளாக பல்வேறு சாத்திய கூறுகளை ஆராய்ந்து ஆக்கபூர்வமான செயல் திட்டமாக மாற்றியுள்ளோம்.

மத்திய அரசின் சி.சி.ஆர்.ஓய்.,யின் கண்காணிப்புடன், இந்திய இயற்கை மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் முன்மாதிரியாக செயல்படுத்த தொடங்கியுள்ளோம். அடுத்த ஓராண்டில் தமிழ்நாடு முழுவதும் 250 நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக்கை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் சமூக நலம், சமூகஅறிவியல் பிரிவின் பேராசிரியர்கள், நேச்சுரோபதி யோகா கேந்திரா கிளினிக் வழியாக அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கிளினிக்குகளை உருவாக்கி செயல்படுத்தவும், தரத்தை உயர்த்தவும், வல்லுனர்கள் குழு அமைத்து அரசின் அங்கீகாரமும் அனுமதியும் பெற உள்ளோம். மேலும், தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, வாய்ஸ் ஆப் சக்தி, சிவாஞ்சலி டிரஸ்ட் ஆகியவை இணைந்து புதிய நேச்சுராபதி திட்டத்தை கோவையில் துவக்கிறது என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையினர் இயக்குனர் பேராசிரியர் சுரேஷ்பாபு, சிவாஞ்சலி டிரஸ்ட் அறங்காவலர் உமாதேவி, வாய்ஸ் ஆப் சக்தி தேவி தலைவர் லட்சுமி மற்றும் பயிற்சியாளர் டாக்டர் சோனாலி சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.