சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பணிகள்: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்ட குடியிருப்பில் பழுதடைந்த சுமார் 960 வீடுகளை இடித்து அதே இடத்தில் மறுக்கட்டுமானம் பணி அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடையே ஆலோசனைக் கூட்டம் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மேயர் கல்பனா ஆனந்தகுமார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சிங்காநல்லூர் பகுதியில் வீட்டு வசதி வாரியத்தால் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 960 வீடுகள் மிக பழுதடைந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் மறுக்கட்டுமானம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அதில் பல்வேறு சட்ட திருத்தங்கள் இருந்ததாகவும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டு, தற்பொழுது அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.

மேலும் இங்கு இருந்த பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து அவர்களே கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளனர். இங்கு மிக தரமான பாதுகாப்பான கட்டிடங்கள் வரும்.

பராமரிப்பிற்காக சங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார் எனவும் கூறினார். 12 இடங்களில் இருந்து இது போன்ற கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது அதில் மூன்று நான்கு இடங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் மூன்று மாத காலங்களில் பணிகள் துவங்கி விடும். 30 மாத காலங்களில் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இதற்கான மதிப்பீடு குறித்த நாங்கள் எதுவும் கேட்கவில்லை. மேலும் கட்டுமான நிறுவனமே அனைத்து வேலைகளையும் முடித்து உரிமையாளர்களிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளோம்.

வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட 8000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளது. அதனை விற்பதற்கு சில புதிய திட்டங்களை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம். விற்றது போக மீதமுள்ள குடியிருப்புகளை வாடகை குடியிருப்புகளாக மாற்றி விடலாம் என ஆலோசித்துள்ளோம்.

பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்ட பின்பே ஒரு இடத்தில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இப்பகுதியில் 16 மாடிகள் வருகிறது.

வயதானவர்களுக்கு கீழுள்ள குடியிருப்புகளை ஒதுக்கி தர வேண்டும் என பலர் கோரிக்கை விடுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்பொழுது கட்டப்படும் கட்டிடங்களில் லிப்ட் வசதி உள்ளது. காற்று வசதி நன்றாக இருக்கும் மின்விசிறி தேவையில்லை அதனால் மின் கட்டணம் குறையும் என பதிலளித்தார்.