அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அரசின் நலத் திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி, ‘சி, டி’ பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

“சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள்ஆகியோருக்கும் ரூ. 500 வழங்கப்படும்.

மேற்கூறிய மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு ரூ. 221 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.