மனிதர்களை கடலுக்கடியில் கொண்டு செல்லும் சமுத்ராயன் திட்டம்..

விண்வெளி, நட்சத்திர கூட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆழ்கடல் ஆராய்ச்சியும் முக்கியமானதே. விண்வெளி ஆராய்ச்சியை விட அதிகமாக நம் ஆழ்கடலில் அதிக ஆச்சரியங்கள் காத்துகொண்டு இருக்கின்றன.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே ஆளில்லா மற்றும் மனிதர்களுடனான ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்தியா இதுவரை ஆளில்லாத நீர்மூழ்கிகள் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்து வந்தது. அதில் 2021 அக்டோபரில் ‘சமுத்ராயன்’ என்ற கடல் பணியை அறிமுகப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளின் கடல் ஆராயும் நாடுகளின் கிளப்பில் இந்தியா இணைந்தது.

தற்போது “சமுத்ரயான்” திட்டத்தின் மூலம் இந்தியா முதன்முறையாக மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சமுத்ரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் மூன்று பணியாளர்களை 6,000 மீட்டர் ஆழத்திற்கு ‘மத்ஸ்யா 6000’ என்ற வாகனத்தில் அனுப்ப உள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மூலம் ‘மத்ஸ்யா 6000’ வாகனத்தை வடிவமைத்து உருவாக்கி வருகிறது

இந்த வாகனம் சாதாரண செயல்பாட்டின் கீழ் 12 மணிநேரமும், மனித பாதுகாப்புக்காக அவசரகாலத்தில் 96 மணிநேரமும் தாங்கும் திறன் கொண்டது. வாகனத்தின் வடிவமைப்பு நிறைவடைந்துள்ளதுடன், வாகனத்தின் பல்வேறு கூறுகளை சோதனை செய்து வருகின்றனர். விரைவில் நிகழ் நேர பயன்பாட்டு சோதனைக்கு உற்படுத்தப்படும்.

இத்திட்டம் மூலம் கடலுக்கு அடியில்,நிக்கல், கோபால்ட், மாங்கனீசு, பூமியின் அரியதாதுக்கள் போன்ற கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் மாதிரிகளை சேகரிப்பதற்கும் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்புகின்றனர். அறிவியல் ஆராய்ச்சி தவிர, கடலுக்கு அடியில் உள்ள இயற்கை வளங்களை ஆய்வு செய்யவும், ஆழ் கடல் சுற்றுலா பணிகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காக 6000 மீட்டர் ஆழம் வரை ஒருங்கிணைந்த நீர்மூழ்கி இயந்திரம் மற்றும் இணைக்கப்பட்ட ஆளில்லா தானியங்கு வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவின் ரூ.4,077 கோடி மதிப்பிலான ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக சமுத்திராயன் உள்ளது.