ஜூனியர் குதிரைப்பந்தய போட்டியில் கோவை மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை

தேசிய ஜூனியர் குதிரையேற்ற பந்தய போட்டியில் கோவையை சேர்ந்த 8 மாணவர்கள் பங்கேற்று 9 பதக்கங்களை வென்றனர்.

இது குறித்து கோவை ஸ்டேபிள் ஈகுஸ்டரியன் கிளப் பயிற்சியாளர் சரவணன் கூறுகையில்:
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உள்ள குதிரையேற்ற அகாடமியில், அகில இந்திய அளவிலான தேசிய ஜூனியர் குதிரையேற்ற பந்தயப்போட்டி கடந்த 2022 டிசம்பர் 19 ல் நடந்தது.

தேசிய அளவில் 400 பேர் பங்கேற்றனர். 450 குதிரைகள் பங்கேற்றன. 10 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பங்கேற்றதில், கோவை ஸ்டேபிள் ஈகுஸ்டரியன் கிளப் சார்பில் 10 குதிரைகளும், திவ்யேஷ்ராம், வாண்யா கர்ணன், பிரித்திவ் கிருஷ்ணா, விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித், ஆரதனா ஆனந்த், ஆதவ் கந்தசாமி, ராகுல் ராஜேஷ் கண்ணன் என 8 மாணவர்களும் பங்கேற்றனர்.

அக்குமுலேட்டர் என்ற போட்டியில், ஆரதனா ஆனந்த் தேசிய அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளார். டாப்ஸ்கோர் என்ற போட்டியில் ராகுல் நான்காம் இடம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவிலான சிறந்த குதிரையேற்ற பந்தய வீரர் பட்டத்தை திவ்யேஷ்ராம் பெற்றுள்ளார். இதில், தனித்திறன்போட்டியில் திவ்யேஷ்ராம் தங்கம் வென்றார்.

குழுவிற்கான தங்கத்தை ஆதவ் கந்தசாமி வென்றார். ஆரதனா ஆனந்த், திவ்யேஷ்ராம், விக்னேஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ஆகியோர் குழு அளவிலான வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர் என தெரிவித்தார்.

பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளை அகாடமியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.