சென்சார் கருவி பழுது பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாம்பன் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கடல்காற்று அதிகமாக வீசப்படும் போது பாம்பன் ரயில் பாலத்தில் மிக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

முன்னெச்செரிக்கையாக கடல் காற்று, அலையின் தன்மைகளை கண்டறிய தண்டவாளத்தில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடல் காற்றின் வேகம், சீற்றம் குறித்து பதிவு செய்யும். அதனை பொருத்து பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

கடந்த ஒரு வாரமாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நவீன சென்சார் கருவி திடீரென பழுதானதால் நேற்று மாலை முதல் ரயில்களை இயக்க சிக்னல்கள் கிடைக்கவில்லை. இதனால் கடலில் காற்று மற்றும் அலையின் தன்மை குறித்த விவரங்கள் கிடைக்க பெறவில்லை.

இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட ரயில், மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயில் மண்டபம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் கடக்கும்போது பாம்பன் ரயில் பாலத்தில் அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.