கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை

சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் இன்று பிற்பகல் உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இந்தியாவில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

சில வாரங்களாக சீனாவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பி.எஃப்.7 வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் அதிகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.