தக்காளி, கத்திரி, வெண்டை விலை உயரும் – வேளாண் பல்கலை கணிப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகள் தங்கள் நடவு மற்றும் விற்பனை முடிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

தற்போது கோவை மொத்தவிலை சந்தைக்கு தக்காளி அதன் சுற்றுவட்டார கிராமங்களான கிணத்துக்கடவு, சாவடி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், உடுமலைபேட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியிலிருந்து வருகின்றது.

வர்த்தக மூலங்களின்படி, கடந்த பருவத்தின் விலை குறைவு காரணமாகவும், பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தினாலும் தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூருலிருந்து வருகின்றது.

தமிழகத்தில், சேலம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிக அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது.

வர்த்தக மூலங்களின்படி, தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு வெண்டை வரத்தானது மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் மற்றும் போளுவாம்பட்டி பகுதிகளிலிருந்து வருகின்றது.

அறுவடையின் போது (மார்ச் – ஏப்ரல் 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.21 முதல் 23 வரை, நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.23 முதல் 25 ஆகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை ரூ.22 முதல் 24 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது.

மேலும் நீடிக்கும் பருவ மழையினால் சந்தைக்கு வரத்து குறையும் என்பதினால் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.