உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும் – அண்ணாமலை

உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும் எனவும், திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை எனவும் கோவையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: அன்னூர் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனம் வாங்கி வைத்துள்ள தரிசு நிலம் கையகப்படுத்தப்படும் என்கிற அரசின் அறிவிப்பை பாஜக வரவேற்கிறது.

விவசாயம் பற்றி ஆளும்கட்சி உணர்ந்திருப்பது மகிழ்ச்சி. தவறாக கொடுக்கப்பட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலைக்கும் ஆ.ராசாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

மேலும் டிட்கோவை வைத்து தண்ணீரை குறிவைத்து நிறுவனங்கள் வருகிறது. ஆ. ராசா அதை புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

கோவை கார் வெடிவிபத்து என்.ஐ.ஏ விசாரணை திருப்திகரமாக உள்ளது என அண்ணாமலை குறிப்பிட்டார்.

உதயநிதி அமைச்சரான பிறகு பல்வேறு கருத்துக்களை திமுகவினர் கூறி வருகின்றனர். உதயநிதிக்கு திரைத்துறை சார்ந்த அமைச்சகம் தான் பொருத்தமாக இருக்கும். திமுக அமைச்சர்களுக்கு உதயநிதியை புகழ்வதுதான் ஒரே வேலை.

கட்சிகள் கூட்டணி குறித்து கட்சி தலைவர்கள் பேசினால் பொருத்தமாக இருக்கும். பாஜக அரசியலில் இருப்பது தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. 2024 தேர்தல் மோடிஜிக்கான தேர்தல் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் பிழைக்க வேண்டுமா, வேண்டாமா? அதிகாரத்தை வைத்து திரைத்துறையை ஒரு பக்கம் வைக்கக்கூடாது.

தமிழக காவல்துறை மிகவும் புத்திசாலித்தனமானது. காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளது என பேசினார்.

மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது என்பதையும் அவர் பதிவிட்டார்.

பாஜகவை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது என்ற அவர், ஆரியம்- திராவிடம் என்கிற பிரிவினையை ஏற்காதவன் நான் என்றார்.

டேண்- டீ ஆரம்பித்தது லாப நோக்கிற்காக அல்ல. இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்களின் நலனுக்காக துவங்கப்பட்டது. ஆ. ராசா அதனை புரிந்து கொள்ளவேண்டும்.

பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம். அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது என்றார்.

அரசாணை மூலம் விவசாயிகளை எந்த வகையிலும் நிர்பந்தம் செய்யக்கூடாது.
நீர், நிலத்தை மாசுபடுத்தாத நிறுவனங்கள் மட்டுமே அன்னூரில் வரும் என அரசு தெரிவித்துள்ளது. அதனை திமுக காப்பாற்ற வேண்டும்.  அரசு அறிவிப்பை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லை. ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்ட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது எனக் கூறினார்.