கொடிசியாவில் டிரக், டிரெய்லர் டயர் கண்காட்சி

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் டிசம்பர் 18 வரை டிரக், டிரெய்லர், டயர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் துவக்கி வெள்ளிக்கிழமை வைத்தார்.

தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் (சிம்டா) பொது செயலாளர் சண்முகப்பா, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தன்ராஜ் செல்லப்பன், அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் துணைத்தலைவர் அரவிந்த் அப்பாஜி, நிதி கமிட்டி தலைவர் சுபம் சுந்தர் ராஜன், சிம்டா பொருளாளர் என்.பி வேலு, கோயம்புத்துார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகேசன் மற்றும் பல பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

டிரக், டிரெய்லர் மற்றும் டயர் கண்காட்சியானது, ஆசியாவிலேயே, டிரக்குகள், டிரெய்லர்கள், டிப்பர்கள், டேங்கர்கள், கண்டய்னர்கள், ரீபர்ஸ், டயர்கள் மற்றும் ஒரிஜினல் உதிரிபாகங்கள் தயாரப்பாளர், அது சார்ந்த தொழில்களுக்கான கண்காட்சியாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ், அசோக் லேலாண்ட், இசுஜூ மோட்டர்ஸ், பாரத் பென்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, டயர் உற்பத்தியாளர்களான அப்போலோ, எல்ஜி ரப்பர் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. தொழில் வணிக விரிவாக்க நடவடிக்கைகள் பற்றி விளக்கவும், புதிய வாடிக்கையாளர்களை பெறவும் இந்த கண்காட்சி உதவும்.

இங்கு கனரக மோட்டார் வாகனங்களின் தயாரிப்புகள், தள்ளுபடிகள், போட்டி விலை போன்றவைகளை ஒரே இடத்தில் அறிய முடியும். வாங்குவோர், விற்பனை செய்வோர், போக்குவரத்து தொழிலில் உள்ளோர், வாகன கட்டுமானத்தில் உள்ளவர்கள் பங்கேற்று வாடிக்கையாளர்களை கவர முடியும்.

இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும். பொதுமக்களும் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.