மன இறுக்கத்தில் இருந்து விடுபட போதை ஒழிப்பு மையத்தில் டிவி வைக்கத் திட்டம்

– கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்களுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு போதையில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெற வருபவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தொலைக்காட்சிப்பெட்டி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது:
போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சைக்கு வருபவர்கள் பல்வேறு விதமான மன நிலையில் வருகின்றனர். இவர்களுக்கு தியானம், யோகாசனம், மனநல ஆலோசனைகள் இவற்றுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு போதையில் இருந்து மீட்கப்படுகின்றனர். போதைக்கு அடிமையாகி மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுபவர்களை சாந்தப்படுத்தும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.

சிகிச்சைக்கு வருபவர்களின் நிலையைப் பொருத்து 15 நாள்கள் முதல் 30 நாள்கள் தங்கியிருந்து ‘சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் ஒரு சில நேரங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இறுக்கமான சூழல் ஏற்பட்டு மருத்துவர்கள், கண்காணிப்பாளர்களிடம் வாக்குவாதம் செய்வது, வெளியே செல்ல நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தவிர்க்கும் விதமாக போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் படங்களை கண்டுகளித்து மன இறுக்கத்தில் இருந்து விடுபட முடியும்.

அதே போல் சதுரங்கம், கேரம் போர்டு போன்ற உள் விளையாட்டு அரங்கில் விளையாடக் கூடிய விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளன. போதைக்கு அடிமையானவர்களின் மன இறுக்கத்தை இது போன்ற விளையாட்டுகள் போக்கி எளிதில் மற்றவர்களுடன் கலந்து உரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதன் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.