அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம் எடுக்கப்படாது

– ஆ. ராசா எம்.பி

கோவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க விவசாயிகளிடம் இருந்து விளை நிலங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லாமல் கையகப்படுத்தப்பட மாட்டாது என நீலகிரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி ஆ. ராசா கோவையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சார்பாக தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக சிலர் மக்களிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கலெக்டர், துறை அதிகாரிகள் ஆகியோர் அந்த பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொகுதி உறுப்பினர் எம்பி என்ற நிலையில் என்னிடம் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் ஆகியோர் இடத்தில் பேசி மக்களிடம் நிலவி வரும் தேவையற்ற அச்சத்தை போக்க உள்ளேன்.

இங்கு வரபோவது சிப்காட் அல்ல டிட்கோ தான். மாசு, கழிவு நீர் வெளியேற்றும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஒன்றிய அரசும் இதனை அனுமதிக்காது. அங்கு 2 ஆயிரம் ஏக்கர் தனியார் கம்பெனி நிலங்கள் உள்ளன. அதை தான் கையகப்படுத்த உள்ளோம்.

விவசாயிகளிடம் இருந்து விலை நிலங்கள் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்தப்பட மாட்டாது. தங்களது நிலம் அனுமதியின்றி எடுத்து விடுவார்களோ என அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கின்றனர். அதை போக்க தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் அறிவிப்பார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

விளை நிலங்களை தாமக முன்வந்து கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டுமே வாங்கி கொள்வோம். இசைவு இல்லாமல், அனுமதி இல்லாமல் தனி நபரின் இடங்கள் எடுக்கப்படமாட்டாது.

ஏழை, எளிய படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி பகுதியை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். அண்ணாமலை ஊழல் பட்டியலை அறிவிப்பதாக கூறியுள்ளார். ஆதாரம் இருந்தால் தாராளமாக அறிவிக்கட்டும். வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாது எனக் கூறினார்.