வாய்ப்பு கிடைத்தால் பன்னீர்செல்வத்தை சந்திப்பேன் – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று அக்கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கோவில்களில் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் ஏன் திமுகவிற்கு வாக்கு அளித்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் இருப்பதுதான் உண்மை. மேலும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக ஏன் ஆக்கினார்கள்? என பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருவதாக கூறினார்.

மக்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் பழனிச்சாமி செய்த தவறுகளை உணர்ந்துள்ளதாகவும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறிய அவர் சுயநலத்தாலும் பதவி வெறியாலும் ஒரு சமூகத்திற்கு மட்டுமான கட்சியாக சிலர் மாற்றியுள்ளதாகவும் எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரும் என தெரிவித்தார்.

மேலும் தற்போது அதிமுகவினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் தங்கள் மீது வழக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தினாலும் தாங்கள் இருக்கின்றோம் என்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதாலும் தான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே தவிர மக்களின் மீது உள்ள எண்ணம் எல்லாம் கிடையாது என தெரிவித்தார்.

மேலும் வாய்ப்பு கிடைத்தால் பன்னீர்செல்வத்தை சந்திப்பேன் என தெரிவித்தார். டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் மூவரும் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அம்மாவின் (ஜெயலலிதா) உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும் என தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து சில மாதங்களில் தெரியவரும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.