மழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல்

மழை காரணமாக கோவை குற்றால அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர்.

இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.