மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன – ஐ.ஜி சுதாகர்

மேற்கு மண்டலத்தில் (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) கடந்த ஆண்டை காட்டிலும் குற்றங்கள் குறைந்துள்ளதாக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் கோவை சரக உயர் காவல் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் 27 டி.எஸ்.பிகளும் 8 ஏடிஎஸ்பி களும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்ற சம்பவங்கள் குறித்து சீராய்வு பணியானது மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஜி சுதாகர், கடந்த ஆண்டில் கோவை சரகத்தில் 142 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 91 கொலைகள் தான் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் ஆதாய கொலைகள் குறைந்துள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வழிப்பறி செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 78 வழக்குகள் வழிப்பறியும், இந்த ஆண்டு 52 வழக்குகள் பதிவாயிருப்பதாக தெரிவித்தார்.

அது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்ற ஆண்டு 431 வழக்குகள் பதியப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. போக்சோ வழக்கில் 17 வழக்குகளில் தண்டனை கடந்தாண்டில் பெறப்பட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு மட்டும் 87 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டு இருப்பதாக கூறினார்.

அதேபோன்று சென்ற ஆண்டு குண்டர் சட்டத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஆண்டு 155 பேர் குண்டர் சட்டத்திலும் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று பல்வேறு பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகள் அதிகமாக நடைபெற்று உள்ளது.

மேலும் மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் 60% கஞ்சா ஒழிப்பு பணி நிறைவேறி உள்ளது. மேலும் மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனம் சார்பாக காவலர்களுக்கு மெடிக்கல் கிட் (ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி) வழங்கப்பட்டது. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு தினமும் அதை பரிசோதனை செய்து ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கான வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.