மதுபானங்களை சாலையில் கொட்டி ச.ம.க போராட்டம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம் மேற்கொண்டனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர், அக்கட்சியின் தலைவர் சரத்குமார் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன்படி கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில் உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மது ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் மது ஒழிப்பு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில் மதுபானங்களை சாலையில் கொட்டி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டியன், நேருஜி, ஆலடி ஆனந்த், முரளி கிருஷ்ணன், சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உபைதூர் ரஹ்மான், தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகி உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் திமுக ஆட்சி வந்த பிறகு மின் கட்டணம், கோவை மாநகராட்சியில் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி உள்ளதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள போதும், மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் மத்திய அரசு நாட்டு நலனை பாராமல் மதத்தை பிரித்து அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாக கூறிய அவர், இந்தியாவை வளப்படுத்த வேண்டுமே தவிர பிரிவினைவாதத்தை உண்டாக்கக் கூடாது என தெரிவித்தார்.